*போலீசார் பேச்சுவார்த்தை
திண்டிவனம் : திண்டிவனத்தில் சேறும் சகதியுமாக உள்ள சாலையில் பெண்கள் நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.திண்டிவனத்தில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அனைத்து தெருக்களிலும் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாததால் அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் அந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டிவனம் ரொட்டிக்கார தெருவில் பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில இளைஞர் ஒருவர் மண்ணில் புதைந்து உயிரிழந்தார்.
அப்பகுதியில் உள்ள சாலைகளில் தற்போது பெய்த மழையினால் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வந்த நிலையில், நேற்று காலை திடீரென ஒன்று கூடிய அப்பகுதி பொதுமக்கள், சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தகவல் அறிந்ததும் திண்டிவனம் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நகராட்சி அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் உடனடியாக சாலையை சீரமைக்கவில்லை என்றால் நகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாகவும் பொதுமக்கள் தெரிவித்து பின்னர் கலைந்து சென்றனர்.