Wednesday, May 29, 2024
Home » மறு கரைக்கு நீந்தி செல்வதாக நண்பர்களிடம் சவால்: கல்குவாரி குட்டையில் மூழ்கி பெயின்டர் பரிதாப பலி

மறு கரைக்கு நீந்தி செல்வதாக நண்பர்களிடம் சவால்: கல்குவாரி குட்டையில் மூழ்கி பெயின்டர் பரிதாப பலி

by Neethimaan

 

பல்லாவரம்: சென்னை கே.கே.நகர், சூளைப்பள்ளம், மொரார்ஜி தேசாய் தெருவை சேர்ந்தவர் செல்வகணபதி (35). அதே பகுதியில் பெயின்டராக வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் உள்ள தனது நண்பர்களை பார்க்க சென்றிருந்தார். அங்கு, நண்பர்கள் அனைவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர், அதே பகுதியில் இருந்த கல்குவாரி குட்டையில் குளித்துள்ளனர். அப்போது, நண்பர்கள் அனைவரும் கரையில் குளித்த நிலையில், செல்வகணபதி மட்டும் இக்கரையில் இருந்து அக்கரைக்கு நீந்திச் செல்லப்போகிறேன், என நண்பர்களிடம் கூறியுள்ளார். அவர்கள், முடியாது என கூறியுள்ளனர். உடனே, அவர்களிடம் சவால் விட்டவாறு, ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு செல்வகணபதி நீந்த தொடங்கினார்.

பாதி தூரம் சென்றதும் மேற்கொண்டு அவரால் நீந்த முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரில் மூழ்க தொடங்கினார். அவர், தண்ணீரில் மூழ்கி தத்தளிப்பதை கண்ட அவரது நண்பர்கள், கரையிலிருந்து கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தாம்பரம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 1 மணி நேரம் போராடி, செல்வகணபதி உடலை மீட்டனர். சங்கர் நகர் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  நண்பர்களுடன் கல்குவாரி குட்டையில் குளித்த பெயின்டர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோடைகாலம் வந்தாலே இதுபோன்ற கல்குவாரி குட்டை மரணங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க இது போன்ற திறந்த நிலையில் உள்ள கல்குவாரி குட்டைகளை சுற்றிலும் இரும்பு கம்பிகள் கொண்டு தடுப்புகள் அமைத்து, ஆபத்து குறித்த எச்சரிக்கை விளம்பர பலகைகள் வைத்து, பெருகி வரும் உயிரிழப்பை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

20 − fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi