தர்மபுரி: தர்மபுரியில் 6 வயது சிறுவன் குடிநீர் தொட்டியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. செல்போன் தராததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக முதலில் தகவல் வெளியான நிலையில் தற்போது திடீர் திருப்பமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் காட்டாம்பட்டி அருகே 2 நாட்களுக்கு முன்பு 6 வயது சிறுவன் குடிநீர் தொட்டியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டான். கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் டேப் ஒட்டப்பட்டு குடிநீர் தொட்டியில் சிறுவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டான்.
இந்நிலையில், சிறுவனை உறவினர் ஒருவரே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 6 வயது சிறுவனை ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறுவனின் உறவினரான 18 வயதான பிரகாஷ் என்பவர் போக்சோ மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். செல்போனை தராததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக முதலில் தகவல் வெளியான நிலையில், திடீர் திருப்பமாக பாலியல் தொல்லை தந்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
சிறுவனின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து நீரில்லாத தொட்டியில் வீசி சென்ற பிரகாஷ் கைதானார். இதனிடையே, சிறுவனை ஒருவர் மட்டும் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கூட்டாகத்தான் கொலை செய்திருக்க வேண்டும் என கூறி கிருஷ்ணாபுரம் காவல் நிலையம் முன்பு சிறுவனின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.