தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி பட்டியலின பெண்ணை நடுவழியில் இறக்கிவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அரூர் அடுத்த நவலை கிராமத்தைச் சேர்ந்த பாஞ்சாலை என்பவர் பகலில் காய்கறி வியாபாரமும், மாலையில் மாட்டு இறைச்சி பக்கோடாவும் செய்து வருகிறார். வழக்கம்போல ஆரூரில் மாட்டு இறைச்சி வாங்கிய அவர் தனது கிராமத்துக்கு செல்ல அரசுப் பேருந்தில் ஏறினார். பஞ்சாலையிடம் பயணச்சீட்டு வழங்க வந்த நடத்துநர் ரகு என்பவர் அவரது கிராம பெயரை ஏளனமாக சுட்டிக்காட்டி மாட்டு இறைச்சி வைத்துள்ளாயா என கேட்டதாக கூறப்படுகிறது.
உடனடியாக பேருந்தில் இருந்து இறங்குமாறு வற்புறுத்திய போது அடுத்து பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விடுங்கள் என்று அந்த பெண் கெஞ்சியதாக தெரிகிறது. ஆனால், மாட்டு இறைச்சி வைத்துக்கொண்டு பயணம் செய்ய அனுமதிக்க முடியாது என கூறிய நடத்துநர் வனப்பகுதியில் வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டு சென்றதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தை அறிந்த பாஞ்சாலையின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அந்த குறிப்பிட்ட பேருந்து திரும்பி வந்தபோது மறியலில் ஈடுபட்டனர். புகாரை தொடர்ந்து நடத்துநர் ரகு, ஓட்டுநர் சசிகுமார் பணியிடை நீக்கம் செய்யபட்டனர். பகுத்தறிவு நிறைந்த மாநிலமான தமிழ்நாட்டில் மாட்டு இறைச்சியை காட்டி ஒருவரை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டு சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக எஸ்.பி.டி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.