திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலில் வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் 57,909 பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோயில் உண்டியலில் ரூ3.81 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். தற்போது கோடை விடுமுறை காரணமாக ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கோயிலுக்கு வருகின்றனர்.
இதனால் நேற்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். இனிவரும் நாட்களில் பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால் அதற்கேற்ப வசதிகளை துரிதப்படுத்த திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.