அயோத்தி: உத்தரபிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். இந்நிலையில் எம்பி பிரிஜ் பூஷனுக்கு ஆதரவாக அயோத்தியின் சரயு நதிக்கரையில் உள்ள ராம் கதா பூங்காவில் வரும் 5ம் தேதி விழிப்புணர்வு பேரணியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இருந்தும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடுவார்கள் என்று பிரிஜ் பூஷன் சரண் சிங் கூறியுள்ளார். இதுகுறித்து போலீஸ் எஸ்பி கவுதம் கூறுகையில், ‘வரும் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் என்பதால் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி அரசின் நிகழ்ச்சியாக மட்டுமே இருக்க வேண்டும். மற்ற இடங்களில் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கவில்லை. மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனியார் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்றார்.