திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே தந்தை இறந்த சில மாதங்களில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி இறந்தாள். திருப்பத்தூர் சிவராஜ்பேட்டை புதிய காலனியை சேர்ந்தவர் மணிகண்டன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுமித்ரா. தம்பதிக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், மணிகண்டன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.
சுமித்ரா கூலி வேலை செய்து பிள்ளைகளை வளர்த்து வருகிறார். சுமித்ராவின் 3வது மகள் அபிநிதி(4) கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டாள்.
இதையடுத்து கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். குணமான நிலையில், கடந்த 26ம் தேதி மீண்டும் அபிநிதிக்கு அதிக காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டு மயக்கம் அடையவே, உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு ரத்த பரிசோதனையில் சிறுமிக்கு தட்டணுக்கள் 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்தது தெரிந்தது. உடனடியாக அபிநிதியை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மேற்கொண்ட பரிசோதனையில் சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சிறுமி அபிநிதி பரிதாபமாக இறந்தாள்.
இதனிடையே சுமித்ராவின் 2வது மகளான ேயாகலட்சுமி(7) மற்றும் 8 மாத ஆண் குழந்தையான புருஷோத்தமன் ஆகிய இருவருக்கும் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இருவரும் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் சிவராஜ்பேட்டையில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலியானதால், நேற்று அப்பகுதியில் சுகாதாரப் பணிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரு வீட்டில் பாத்திரத்தில் மூடப்படாமல் வைத்திருந்த தண்ணீரை தூய்மை பணியாளர்களுடன் இணைந்து வெளியே எடுத்து வந்து தரையில் ெகாட்டினார்.