பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த பம்மல், சங்கர் நகர் கிழக்கு பிரதான சாலையில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள 776 வீடுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த அடுக்குமாடி வீடுகளை விற்பனை செய்தபோது குடிநீர், கழிவுநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும், இலவசமாக செய்து தரப்படும் எனக்கூறி விற்றுள்ளனர். இதை நம்பி தற்போது குடியிருப்பில் உள்ளவர்கள் வீடுகளை வாங்கியுள்ளனர். இந்நிலையில் குடியிருப்பில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட கட்டுமான நிறுவனம், குடியிருப்புவாசிகளுக்கு தேவையான குடிநீர், கழிவுநீர் வசதி உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து தராமல் காலம் கடத்தி வந்துள்ளது. இவ்வாறு தொடர்ந்து 6 ஆண்டுகளாக அந்த கட்டுமான நிறுவனம் ஏமாற்றி வந்துள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசிகள் 100க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு அடுக்குமாடி குடியிருப்பின் வளாகத்தில், தங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பில் எந்த ஒரு அடிப்படை வசதியும் தற்போது வரை செய்து தரப்படவில்லை. குடிநீருக்கும், கழிவுநீரை அகற்றவும் ஒவ்வொரு மாதமும் நாங்கள் ரூ.30 ஆயிரம் செலவு செய்கிறோம். இதுகுறித்து சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் தலைமை அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் சென்று, அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி முறையிட்டும், அவர்கள் அலட்சியமாக பதிலளித்தனர் என்றனர்.