ஒன்றிய பாஜ அரசு கடந்த 5 ஆண்டுகளாக, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற கோரிக்கையை முன்னிறுத்தி வருகிறது. இதற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தப்பட்டால் செலவினங்கள் குறையும். நாட்டின் வளர்ச்சிப்பணிகள் முடுக்கி விடப்படும் என்பதுதான் பாஜ அரசின் நிலைப்பாடு. ஆனால், அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதுதான் அரசியல் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. தற்போதைய சூழலில் நாடாளுமன்ற தேர்தலையே ஒரே நேரத்தில் அமைதியான சூழலில் நடத்தி முடிப்பது சிரமமான காரியம்.
காரணம், தமிழகத்தில் மட்டும் சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒட்டுமொத்த இந்தியாவையும் கணக்கிட்டால், லட்சத்தை தாண்டும். இந்த வாக்குச்சாவடிகளில், வழக்கமான வாக்குச்சாவடிகளை விட பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். இது மேலும் பதற்றமான சூழலை உருவாக்கும். இதனால் வாக்குப்பதிவு பாதிக்கும் அபாயம் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை, 1951 முதல் 1967ம் ஆண்டு வரை நாடாளுமன்றம், சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடந்துள்ளது. அப்போது கட்சிகள் எண்ணிக்கை மிகவும் குறைவு.
மேலும், நாடாளுமன்றம் மற்றும் சில மாநிலங்களில் ஆட்சி கலைப்பால், இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவானது. இதன்பின்னர் சட்டப்பேரவை தேர்தல் மாநிலங்கள்ேதாறும் மாறுபட்டன. கடந்த 5 ஆண்டுகளை கணக்கிட்டால், சட்டப்பேரவை தேர்தல், ஒவ்வொரு ஆண்டும் சில மாநிலங்களில் நடந்துள்ளன. இதற்காக பல ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. காலக்கட்டங்கள் மாறுபடுவதால் ஒரே நாடு, ஒரே தேர்தல் எனும்போது, அது வாக்களித்த மக்களின் மனநிலைக்கு எதிரானதாகவே அமையும். மேலும், மாநிலங்களின் உரிமையை பறிக்கும். அதிபர் ஆட்சிமுறைக்கு வழிவகுக்கும் என அரசியல் கட்சியினர், விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மேலும், ஒரே நாடு ஓரே தேர்தலை செயல்படுத்துவற்கு மட்டும், சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு சாதனங்கள் தேவை. நாடாளுமன்றம், சட்டப்பேரவை, உள்ளாட்சிகள் எனும்போது, இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. இது வாக்காளர்களுக்கு தேவையற்ற குழப்பத்தையே ஏற்படுத்தும். மேலும், சட்டமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கான உரிமை மாநில அரசுக்கு மட்டுமே உண்டு. அசாதாரண சூழல் நிலவும்போது மட்டும்தான், ஒரு மாநிலத்தின் ஆட்சியை ஒன்றிய அரசு கலைக்க முடியும். ஒரே தேர்தல் என்ற ஒரு கருத்தை கொண்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சியை ஒன்றிய அரசால் முன்கூட்டியே கலைக்க முடியாது.
மேலும், நாடாளுமன்ற, மாநில சட்டப்பேரவை தேர்தல்களை இந்திய தேர்தல் ஆணையமும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை மாநில தேர்தல் ஆணையமும் நடத்தி வருகின்றன. இந்த சூழலில் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகளிடையே கருத்து மாற்றங்கள் நிகழும். இது அம்மாநிலத்தில் தேவையற்ற அரசியல் நெருக்கடியை கொடுக்கும் என்கிறார் மூத்த தேர்தல் ஆணைய அதிகாரி. ராகுல் காந்தி கூட ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது, அனைத்து மாநிலங்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல் என விமர்சித்துள்ளார். ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. எனவே, ஒன்றிய அரசு மக்கள், மாநிலங்களின் நலன் கருதி இதனை உடனடியாக கைவிட வேண்டுமென்பதே பெரும்பான்மையான மக்களின் கருத்தாகும்.