டெல்லி : டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்வார் என்றும் சிறையில் இருந்து அவர் நிர்வாகம் செய்வார் என்றும் டெல்லி அமைச்சர் அதிஷி காட்டமாக தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட செய்தியை முதலில் ஊடகங்களுக்கு தெரிவித்த அதிஷி, கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கை அரசியல் சதி என்று குற்றம் சாட்டினார். அமலாக்கத்துறையும் அவர்களின் எஜமானர்களான பாஜகவும் நீதிமன்றங்களை மதிப்பதில்லை என்பது தெளிவாகிறது என்றும் அப்படி இருந்து இருந்தால் கெஜ்ரிவாலின் வீட்டில் சோதனை நடத்த வந்து இருக்க மாட்டார்கள் என்றும் அவர் விமர்சித்தார்.
கெஜ்ரிவாலுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த சில மணி நேரங்களிலேயே அமலாக்கத்துறை அவரின் வீட்டிற்கு சென்றுள்ளது என்றும் சோதனையில் ஒரு பைசா கூட அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் அமலாக்கத்துறை தன்னாட்சி அமைப்பு இல்லை என விமர்சித்த அதிஷி, பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் பாஜகவின் ஆயுதமாக செயல்படுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்வார் என்றும் சிறையில் இருந்து அவர் நிர்வாகம் செய்வார் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் டெல்லி பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்த உள்ளதாகவும் அமைச்சர் அதிஷி அறிவித்துள்ளார்.