புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பி.ஆர்.எஸ் கட்சியின் எம்எல்சி. கவிதாவுக்கு ஜாமீன் வழங்க சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகளும், பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவர்களில் ஒருவருமான கவிதா(46) மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது.இந்த வழக்கில் கடந்த 15ம் தேதி கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்தது. டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கவிதாவை மார்ச் 23 வரை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. தொடர்ந்து அவரது அமலாக்கத்துறை காவலை ஏப்ரல் 9ம் தேதி வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா உத்தரவு பிறப்பித்தார்.நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, கவிதா தனக்கு இடைக்கால ஜாமீன் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் தனது மகன் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்குத் தயாராகி வருவதால் அவருக்கு தனது ஆதரவு தேவைப்படுவதாக கோரிக்கை வைத்தார். இந்த வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பட்வா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கவிதாவிற்கு இடைக்கால ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, “கவிதாவிற்கு இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது” எனத் தெரிவித்து கவிதாவின் இடைக்கால ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.