புதுடெல்லி: ரூ.2000 நோட்டுக்களை மாற்ற அடையாள அட்டை எதுவும் தேவையில்லை என்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக டெல்லி உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. புழக்கத்தில் இருந்து வந்த ரூ.2000 நோட்டுகள் முழுமையாக நீக்கப்படும் என கடந்த வாரம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் வரை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும், இதற்கு அடையாள அட்டை எதுவும் வழங்கப்பட தேவையில்லை என்றும், ரிசர்வ் வங்கி தரப்பில் விளக்கம் தரப்பட்டது. இந்த நிலையில் பாஜவை சேர்ந்தவரும், மூத்த வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்தியா டெல்லி உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்துள்ளார்.
அதில்,‘‘பெரும்பாலான இந்தியர்களிடம் ஆதார் அடையாள அட்டை உள்ளது. அதேப்போல் எல்லா குடும்பத்திலும் வங்கிக் கணக்கும் உள்ளது. அப்படி இருக்கும் போது ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கு அடையாள அட்டை எதுவும் தேவையில்லை என தெரிவிப்பது ஏன் என்று புரியவில்லை. அதனால் அடையாள அட்டைகளுடன் ரூபாய் நோட்டுகளை மாற்றும் படி புதிய உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். அப்போது தான் முறைகேடுகள் தடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து மனுவை பரிசீலனை செய்த டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, அதனை அவசர வழக்காக நாளை(இன்று) விசாரிப்பதாக உத்தரவிட்டது.