புதுடெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2018-19ம் ஆண்டில் ரூ.199 கோடிக்கும் அதிகமாக வருமானம் இருப்பதாக மதிப்பிட்ட வருமான வரித்துறை, முந்தைய வரி பாக்கியுடன் சேர்த்து ரூ.100 கோடிக்கும் அதிகமாக வரி செலுத்த மறுமதிப்பீடு செய்தது. இந்த நிலுவை வரியை வசூலிக்க சமீபத்தில் காங்கிரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வருமான வரித்துறை தீர்ப்பாயம் ரத்து செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. அதே சமயம், இந்த விவகாரத்தில் வருமான வரித்துறையின் மறுமதிப்பீடு நடவடிக்கையை எதிர்த்து புதிதாக மனு செய்யவும் காங்கிரசுக்கு நீதிமன்றம் அனுமதி தந்தது. அதன்படி, காங்கிரஸ் தரப்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மன்மோகன், மன்மீத் பி.எஸ்.அரோரா அடங்கிய அமர்வு இன்று விசாரிப்பதாக தெரிவித்தது.