புதுடெல்லி: பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் என்பவர், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீதான வழக்கில் பாலிவுட் நடிகைகள் பலருக்கு தொடர்பு இருப்பதால், அவர்களிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது. இதற்கிடையே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது கட்சியின் மூத்த தலைவர்கள், தன்னிடம் நிதி ஆதாயம் அடைந்ததாக சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் அவ்வப்போது தனது வழக்கறிஞர் மூலம் டெல்லி ஆளுநருக்கு கடிதம் எழுதி வந்தார்.
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகருக்கு எழுதிய கடிதத்தில், ‘எனக்கு கிடைத்த கமிஷன் பணத்தை பயன்படுத்தி தங்களது (கெஜ்ரிவால்) சார்பில் துபாயில் 3 அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கினேன். இவ்விவகாரம் தொடர்பாக எனக்கும் டெல்லியின் முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கும் இடையே நடந்த வாட்ஸ்அப் உரையாடலை விரைவில் வெளியிடுவேன். அடுத்த 7 நாட்களுக்குள் இதுதொடர்பான நகலை அமலாக்கத்துறை மற்றும் ஊழல் தடுப்பு விஜிலென்சுக்கும் அனுப்பி வைப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.