டெல்லி : அமலாக்கத்துறை வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது டெல்லி நீதிமன்றம். டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா, மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் உள்ளிட்டோர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குபதிந்தது. கடந்த ஓர் ஆண்டாக ஆம்ஆத்மி மூத்த தலைவர்கள் சிலர் சிறையில் உள்ளனர். இவ்வழக்கில் ஆம் ஆத்மியின் தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி வருகிறது. இதுவரை 8 சம்மன்கள் அனுப்பப்பட்டும், அவர் அமலாக்கத்துறை முன் ஆஜராகவில்லை.
இதைத் தொடர்நது சம்மன்களை தொடர்ந்து நிராகரித்தது தொடர்பாக அமலாக்கத்துறை டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) பிரிவு 50-ன் கீழ் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் எண்கள் 4 – 8 டெல்லி முதல்வர் மதிக்கவில்லை என்று அமலாக்கத்துறை தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்றைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் முதல்வர் கெஜ்ரிவால் நேரில் ஆஜரானார். இதையொட்டி பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் ரமேஷ் குப்தா ஆஜராகி, மனுதாரர் நேரடியாக ஆஜராகியதால் ஜாமீன் தர வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.