தவளக்குப்பம் : புதுச்சேரி-கடலூர் சாலையில் விபத்துகளை தடுக்கும் வகையில் போக்குவரத்து போலீசாரும், பொதுப்பணித் துறையினரும் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் சென்டர் மீடியன் கட்டைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. அதனை சாலைகளில் பொருத்தும் பணியை சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். அந்த வகையில் அரியாங்குப்பத்திலிருந்து முள்ளோடை வரையிலான முக்கிய சந்திப்புகள் மற்றும் அனைத்து சாலைகளிலும் விபத்து ஏற்படும் இடங்களை அடையாளம் கண்டு அங்கு தடுப்புக் கட்டைகள் அமைத்து வந்தனர்.
ஆனால் இப்பணிகள் முழுமையாகாமல் பாதியிலேயே நின்றது. இதனால் போக்குவரத்தை சீரமைக்க தற்சமயம் சில இடங்களில் பேரிகார்டுகள் மற்றும் இரும்பு பேரல்களை கொண்டு அதில் ரிப்-லெக்டர் பொருத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.
இந்நிலையில் பல இடங்களில் வைக்கப்பட்ட இரும்பு பேரல்கள் மற்றும் பேரிகார்டுகள் வாகன ஓட்டிகளால் சேதமடைந்துள்ளது. மேலும் இரவு நேரங்களில் ரிப்-லெக்டர் சரியாக ஒளிராததால் வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பாதியிலேயே நின்றுவிட்ட சென்டர் மீடியன் பணியை மீண்டும் தொடங்கி போக்குவரத்தை சரிசெய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.