ஜெய்ப்பூர்: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்த பாஜக வேட்பாளர், எம்எல்ஏ மீது ராஜஸ்தான் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் மணிகண்ட ரத்தோட் என்பவர் போட்டியிடுகிறார். இவர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதையடுத்து ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் ராம் சிங் கஸ்வான் அளித்த புகாரின் பேரில், சஞ்சய் சர்க்கிள் போலீசார் கர்நாடகா பாஜக வேட்பாளர் மணிகண்ட ரத்தோட் மற்றும் பாஜக எம்எல்ஏ மதன் திலாவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் ஏசிபி நரேந்திர குமார் கூறுகையில், ‘கர்நாடக மாநில ராம்கஞ்ச் மண்டி எம்எல்ஏ மதன் திலாவர் மற்றும் பாஜக வேட்பாளர் மணிகண்ட ரத்தோட் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான மதன் திலாவர் சிட்டிங் எம்எல்ஏவாக இருப்பதால், இந்த விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துவார்கள். இருவர் மீதும் ஐபிசி பிரிவு 302 (கொலை), 506 (மிரட்டல்) மற்றும் எஸ்சி-எஸ்டி சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறினார்.