கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே அத்திப்பள்ளி வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியில் இருந்து மாநில எல்லையான கர்நாடக மாநிலம் ஆனேக்கல் தாலுகா அத்திப்பள்ளி வரை சாலையின் இருமருங்கிலும் நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும் ஏராளமான பட்டாசு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால், அப்பகுதியை குட்டி சிவகாசி என்றழைக்கின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் சிவகாசியில் இருந்து 3 லாரிகளில் கொண்டு வரப்பட்ட பட்டாசுகளை அத்திப்பள்ளி டோல்கேட் அருகே நவீன் என்பவருக்கு சொந்தமான கடையில் இறக்கி வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் தீ விபத்தில் பலியான 14 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன. இதனிடையே காயமடைந்து மருத்துவமனையில் 7 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வாணியம்பாடி வெள்ளக்குட்டை பகுதியை சேர்ந்த தினேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.