*போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு
திருமலை : தெலங்கானாவில் தகாத உறவு வைத்திருந்த தாயின் 16 வயது மகளை மிரட்டி பலாத்காரம் செய்த இன்ஸ்பெக்டர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.தெலங்கானா மாநிலம் ஜெயசங்கர் பூபாலப்பள்ளியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பண்டாரி சம்பத். இவர் 2022ல் காகித்தியா பல்கலைக்கழக காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணிபுரிந்தார்.
அப்போது ஹனுமகொண்டாவில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணத்திற்கு புறம்பான தகாத உறவு ஏற்பட்டுள்ளது. பின்னர் கம்மம் மாவட்ட இன்ஸ்பெக்டராக, பணியிட மாற்றம் செய்யப்பட்ட பின்னரும் இருவருக்கும் இடையே நெருக்கம் நீடித்தது. இந்நிலையில் சமீபத்தில் ஜெயசங்கர் பூபாலபள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், தான் நெருங்கி பழகி வந்த பெண்ணின் மகளான 16 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி நடந்ததை தனது தாயிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த தாய் காகித்தியா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பண்டாரி சம்பத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக இருந்து இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களை செய்த சம்பந்தப்பட்ட அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகளிர் அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு பெஞ்ச் அமைக்க வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது.