நாகர்கோவில் : குமரி மாவட்டம் காஞ்சிரக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜீன்சிங் (38). தனியார் நிதி நிறுவன குமரி மாவட்ட ஏரியா மேலாளராக உள்ளார். இந்த நிதி நிறுவனத்தில் கருங்கல் கிளை அலுவலகத்தில் ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெற்றிருந்தனர். அவர்களின் நகைகளை மறு அடகு வைத்தும், சில நகைகளுக்கு மதிப்பீடுகளை அதிகரித்தும் பணம் வழங்கப்பட்டிருந்தது.
தணிக்கையின் போது கருங்கல் கிளை மேலாளர் மினி மார்ட்டின் மற்றும் ஊழியர்கள் சிலர் சேர்ந்து இவ்வாறு ரூ.3.19 கோடி வரை மோசடி செய்திருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி கிளை மேலாளர் மினி மார்ட்டின், உதவி மேலாளர் சிஞ்சுலா, பணியாளர் அருண், ஆகிய 3 பேரை கைது செய்தனர். பணியாளர் அஜய ஜீன்சியை தேடி வருகின்றனர்.