கடலூர்: கடலூரில் அதிகாலை பெய்த கனமழை காரணமாக தேரடி தெருவில் பாடலீஸ்வரர் கோயிலின் எதிரே உள்ள பழமையான கட்டிடம் இடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை கடலூர் மற்றும் அத சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. நேற்று நள்ளிரவில் பெய்த கனமழை காரணமாக தேரடி தெரு பாடலீஸ்வரர் கோயிலின் எதிரே உள்ள பயன்படுத்தப்படாத பாழடைந்த பழமையான கட்டிடம் இடிந்து விழுந்தது.
பாடலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான அந்த கட்டிடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு கடைகள் வைக்கப்பட்டிருந்தது. நாளடைவில் அந்த கட்டிடத்தை யாரும் பயன்படுத்தாதால் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அப்பகுதியில் பெய்த கனமழையால் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் கட்டிட இடிபாடுகளை அகற்றி வருகின்றனர்.