கடலூர்: கடலூர் ஒன்றியத்தில் ரூபாய் 75 லட்சம் மதிப்பிலான கிராம சாலை திட்டம்: அமைச்சர் உதயநிதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். கடலூர் ஒன்றியம் பச்சயான்குப்பம் கிராமத்தில் முதல்வர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூபாய் 75 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட சாலை பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்தார். தரமான பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். தமிழக இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதில் நேற்று கடலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார் முன்னதாக ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்பு கடலூர் ஒன்றியம் பச்சையாங்குப்பம் கிராமத்தில் தமிழக முதல்வர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூபாய் 75 .80 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட சாலை பணிகளை திடீர் ஆய்வு செய்தார். விருதாச்சலத்தில் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடலூர் ஆட்சியர் அலுவலகம் ஆய்வு கூட்டத்திற்கு வருவதற்கு முன்பு வழியில் இந்த ஆய்வு பணியை மேற்கொண்டார்.
ஆய்வின்போது அமைச்சர்கள் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ,கணேசன், மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், கூடுதல் ஆட்சியர் மதுபாலன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர் . சாலை பணியை ஆய்வு செய்த அமைச்சர் குறிப்பிட்ட திட்டத்தின் படி சாலை போடப்பட்டுள்ளதா என்பதை அங்குள்ள பொறியாளர்கள் மூலம் சாலையின் தரத்தை பரிசோதனை செய்தால் அப்போது முழுமையான கனத்துடன் சாலை அமைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து தரமான பணிகளை அனைத்து கிராமங்கள், நகரம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அமைச்சரின் திடீர் ஆய்வு மற்றும் முடிக்கப்பட்ட சாலை பணியில் அதன் தரத்தை ஆய்வு செய்தது கிராம மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. திமுக ஒன்றிய நிர்வாகிகள் சுப்பிரமணியன், காசிராஜன் ,தனஞ்செயன் விஜயசுந்தரம் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.