Tuesday, May 7, 2024
Home » கடலூர் அருகே இரு தரப்பினர் மோதல்; 6 பேர் படுகாயம்: 40 பேர் மீது வழக்கு: போலீசார் குவிப்பு

கடலூர் அருகே இரு தரப்பினர் மோதல்; 6 பேர் படுகாயம்: 40 பேர் மீது வழக்கு: போலீசார் குவிப்பு

by Suresh
Published: Last Updated on

கடலூர்: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கல்குணம் கிராமம் உள்ளது. இதன் அருகே வரதராஜன்பேட்டை கிராமமும் உள்ளது. இரண்டு கிராமங்களிலும் உள்ள இருவேறு சமூகத்தினர் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வருகிறது. நேற்று இரவு கல்குணம் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் ஊரில் இருந்து ஒரு பைக்கில் குறிஞ்சிப்பாடி சென்று பின்னர் ஊர் திரும்பினர். வரதராஜன்பேட்டை நீலகட்டிக்குளம் என்ற இடத்தில் வந்தபோது அதே ஊரை சேர்ந்த மாற்று சமுதாயத்தை சேர்ந்த ஒருவர், பைக்கை வழிமறித்து நீங்கள் யார்? எந்த ஊர்? எனவும், இந்த வழியாக ஏன் வருகிறீர்கள் எனவும் கேட்டுள்ளார்.

இதில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கேள்வி கேட்ட நபர் தாக்கப்பட்டார். பின்னர் அவர் தனது ஊரில் உள்ளவர்களிடம் இதுபற்றி கூறி உள்ளார். உடனே ஊர் மக்கள் கழி, கட்டை, இரும்புக்கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கல்குணம் கிராமத்திற்கு சென்று இரண்டு இளைஞர்களையும் தாக்கி உள்ளனர். அதனை தடுக்க முயன்ற ஒரு பெண் உள்பட 4 பேருக்கும் அடி விழுந்தது. மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மினிலாரி, இரண்டு பைக்குகள் ஆகியவற்றையும் அடித்து நொறுக்கினர். இந்த தாக்குதலில் பெண் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இது குறித்து வரதராஜன்பேட்டை பெருமாள்கோவில் தெருவைச் சேர்ந்த சுரேன் (36) என்பவர் கொடுத்த புகாரின்பேரில் கல்குணம் கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன், விக்னேஷ், அரவிந்த், சேதுபதி, தினேஷ், தமிழ்முரசு, திருமூர்த்தி, ராமர், ஆகாஷ் உள்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தரப்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் கல்குணம் மாதா கோவில் தெருவை சேர்ந்த சண்முகம் அளித்த புகாரின்பேரில் வரதராஜன்பேட்டையை சேர்ந்த சுரேன், புஷ்பராஜ், வீரமணி, பிரசாந்த்,தாத்தா என்கிற ராஜசேகர், டோனி, பிரகாஷ், சிலம்பரசன் உள்பட 20 ேபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 2 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். அங்கு அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கும் வகையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

three + 20 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi