திருமலை: புயல் மழை மற்றும் கடும் குளிரால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சற்று கூட்டம் குறைந்தது. இதனால் பக்தர்கள் நேரடியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மிக்ஜாம் புயல் கோர தாண்டவத்தால் தமிழகம் மற்றும் ஆந்திராவில் பல்வேறு மாவட்டங்களில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டது. மழை ஒருபக்கம் இருந்தாலும், கடும் குளிரும் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். கடந்த ஒரு வாரமாக திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து உள்ளது. வார விடுமுறை நாளான நேற்று அதிகாலை முதல் பக்தர்களின் வருகை அதிகரிக்க தொடங்கியது. அதன்படி காலை நிலவரப்படி திருமலைக்கு வரும் பக்தர்கள் நேரடியாக சென்று ஏழுமலையானை தரிசித்தனர்.
* லாலு பிரசாத் குடும்பத்தினருடன் தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று காலை சுப்ரபாத சேவையில் ராஷ்டிரிய ஜன தள கட்சியின் தலைவரும் பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத், அவரது மனைவியும் பீகாரின் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி, அவரது மகன் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி ஆகியோர் பங்கேற்று குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். தரிசனத்திற்கு பின் அவர்களுக்கு வேத பண்டிதர்கள் வேத ஆசிர்வாதம் வழங்கினர். கோயில் அதிகாரிகள், பட்டு வஸ்திரம் அணிவித்து, சுவாமி தீர்த்த பிரசாதம் வழங்கி கவுரவித்தனர்.