அரவக்குறிச்சி, ஜூலை 28: விளைச்சல் பாதிப்பால், வரத்து குறைந்து தக்காளி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறி மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. இக்கடைகளுக்கு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கரூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள மொத்த மார்க்கெட்டிலிருந்து காய்கறி வாங்கி வந்து சில்லறையில் விற்கப்படுகிறது. இந்நிலையில் வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விலை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. சென்ற மாதம் சின்ன வெங்காயம் கிலோ ரூ.40க்கு விற்றது, தற்போது ரூ.130க்கு விற்பனையாகிறது. கிலோ ரூ.30க்கு விற்ற தக்காளி, கிலோ ரூ.110க்கும், இஞ்சி கிலோ ரூ.400க்கும், பூண்டு ரூ.100லிருந்து ரூ.200க்கும், கத்திரிக்காய் ரூ.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பீன்ஸ், அவரக்காய், முட்டைக்கோஸ், பச்சை மிளகாய் என சமையலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் அனைத்து காய்கறிகளும் விலை உயர்ந்துள்ளது