அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நல்லகவுண்டன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் – ராதாமணி தம்பதியினர். இவர்களின் மகள் அனன்யாவின் பூப்பு நன்னீராட்டு விழா அத்தாணி கரட்டூர் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த பூப்பு நன்னீராட்டு விழாவிற்காக அனன்யாவின் தாய்மாமன் மற்றும் மாமன்மார்கள் என அனைவரும் 16 மாட்டு வண்டியில் சீதனம் கொண்டு சென்றனர். தொடர்ந்து அனன்யாவை பல்லாக்கில் வைத்து சுமந்து சென்ற தாய்மாமன் மற்றும் மாமன்கள் பாரம்பரிய முறைப்படி பூப்பு நன்னீராட்டு விழாவை நடத்தினர்.
பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டியில் சீர் கொண்டு சென்று பூப்பு நன்னீராட்டு விழாவை நடத்திய தாய்மாமன் மற்றும் மாமன்மார்களை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்தனர். இது குறித்து அனன்யாவின் தாய்மாமன் தெரிவிக்கையில், முன்பெல்லாம் மாட்டு வண்டியில் தான் தாய்மாமன் சீர் கொண்டு செல்வார்கள், ஆனால் தற்போதைய தலைமுறையினருக்கு இதுவெல்லாம் தெரியாது. எனவே நமது பழைய பாரம்பரிய முறைகளை மீட்டெடுக்கும் வகையில் தற்போதைய சந்ததியினருக்கு கற்று கொடுப்பதற்காக இதுபோல் மாட்டு வண்டியில் சீர் கொண்டு வந்து விழா நடத்தியதாக தெரிவித்தார்.