சென்னை: சமூகத்தில் நல்ல நிலைக்கு வந்தபிறகும் நல்லவர்களாகவே நடந்துகொள்ள வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அறிவுறுத்தினார். ன்னை காரப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தின் 8வது ஆண்டு விழா நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா பங்கேற்றார். அந்த காப்பகத்தில் பராமரிப்பில் உள்ள மாற்றுத்திறனாளிகள், பெற்றோரை இழந்த 80க்கும் மேற்பட்டோருடன் அவர் கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசும்போது, ‘‘தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் வழக்கறிஞராகி அதன் பிறகு நீதிபதியானேன். காப்பகம் மூலம் கல்வி பயிலும் சில மாணவர்கள் பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண்ணே எடுத்துள்ளனர். மாணவர்கள் வாழ்வில் முன்னேற மதிப்பெண் மட்டும் போதுமானது அல்ல. மாணவர்களிடையே நல்ல ஒழுக்கம் இருக்க வேண்டும். மனித நேயம் இருக்க வேண்டும். அவர்கள் மற்றவர்களுக்கு உதவும் வகையில் சிறந்த மாணவராக திகழ வேண்டும். நான் வழக்கறிஞராக இருந்தபோது சில நீதிபதிகள் என்னை கோபப்படுத்தும் வகையில் வேண்டுமென்றே நடந்து கொண்டாலும் தற்போது நீதிபதியான பிறகு எந்த வழக்கறிஞர்களிடமும் அதுபோன்று நான் நடந்து கொண்டதில்லை. சமூகத்தில் நல்ல நிலைக்கு வந்த பிறகும் நல்லவர்களாகவே நடந்து கொள்ள வேண்டும்’’ என்று அறிவுரை வழங்கினார்.