திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள செறுபுழா பகுதியை சேர்ந்தவர் ஜா (35). கணவரை விவாகரத்து செய்து விட்டார். இவருக்கு சுஜித் (12), சூரஜ் (10), சுரபி (8) ஆகிய குழந்தைகள் இருந்தன. இந்நிலையில் ஜாவுக்கு அதே பகுதியை சேர்ந்த ஷாஜி என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. ஷாஜிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 16ம் தேதி ஜாவும், ஷாஜியும் திருமணம் செய்தனர். ஆனால் முதல் மனைவியை ஷாஜி விவாகரத்து செய்யவில்லை. இந்நிலையில் இன்று காலை ஜாவின் வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. சந்தேகமடைந்த பக்கத்து வீட்டினர் கதவை திறந்து பார்த்தனர். அப்போது 5 பேரும் தூக்கு போட்டு இறந்த நிலையில் காணப்பட்டனர்.
இதுகுறித்து செறுபுழா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் 3 குழந்தைகளையும் கொலை செய்த பின்னர் ஷாஜியும், ஜாவும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இருப்பினும் தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்தது கண்ணூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.