‘‘இலை கட்சியின் மந்திரிகள் மத்தியில் இப்போது அதிகமாக பேசப்படும் வார்த்தை எது…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சியின் தலைவராக இருக்ககூடிய மாங்கனிக்காரரின் தலைமையிலான மாஜிக்களின் பேச்சில் பெரும் தள்ளாட்டமாம். கொங்கு மண்டல மாஜி, இந்த அரசு எல்லோரையும் கைது செய்யப்போறாங்கன்னு முன்கூட்டியே ஆரூடம் சொல்லியிருக்காராம். மாங்கனி நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் நிழலானவரின் பேச்சிலும் பதற்றம் தெரிஞ்சதா கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க. வழக்கமா இவர் பேசினால் இலைக்கட்சியின் மாஜி அதை செஞ்சார், இதை செஞ்சாருன்னு புகழ் பாட்டிட்டு தான் போவாராம். ஆனா, சமீபத்துல நடந்த ஆர்ப்பாட்டத்துல கட்சி பெண்களை மைக்கில் வசைபாடினாராம். குறிப்பா, ஏம்மா போட்டோ எடுக்கத்தான் வந்தியான்னு கேள்வி கேட்டிருக்காரு. இதனால லேடி தொண்டர்கள் ரொம்பவே மனம் வெதும்பி போயிட்டாங்களாம். அதோட இல்லாமல் மாஜி மலையை மேடையிலேயே கிண்டல் செஞ்சிருக்காரு. இதனால அவரும் ஷாக்காயிட்டாராம். ஊழல், மோசடி வழக்குகள் என பத்து மாஜிக்களோட கழுத்தை இறுக்கிக்கிட்டு வருதாம். அதற்கான ஆதாரங்கள் எல்லாம் சிக்கியிருக்காம். இதனால சிறைக்கு போவது உறுதிங்குறது அவர்களுக்கு தெரிஞ்சிப்போச்சாம். அதனால இப்போதே அனுதாபம் தேடும் வகையில் அபாய சங்கு ஊதுறாங்க. உப்பு தின்னவன் தண்ணி குடிச்சுத்தானே ஆகணுமுன்னு மாங்கனி மாநகரத்து ரத்தத்தின் ரத்தங்கள் சொல்லிக்கிட்டு இருக்காங்களாம்… இருந்தாலும் இது பழி வாங்கும் போக்கு… மற்றவர்களின் ஆட்சி காலத்தில் நடக்காததா நம்ம ஆட்சி காலத்தில் நடந்தது என்று கேள்வியுடன் அங்கிருந்து கிளம்பிட்டாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பெண்கள் என்றாலே தைரியம் வேண்டும்… ஆனால் இந்த தைரியம் அதிகாரிகளை அசைத்து பார்த்துள்ளதாமே, உண்மையா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தமிழ்நாடு அரசின் வருவாய்துறை ஆவணங்களில் இடம்பெற்றுள்ள நத்தம் என்கிற இடங்களை பத்திரப்பதிவு செய்ய தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் நத்தம் இடங்களை சார்பதிவாளர்கள் பதிவு செய்வதில்லை. ஆனால், கோவை கிணத்துக்கடவு பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் மட்டும் நத்தம் இடங்கள் சப்தம் இல்லாமல் பதிவு செய்யப்படுதாம். அதற்கான தொகையும் ரகசியமாக கைமாறி வருகிறது. இதற்கு எல்லாம் காரணம், இங்குள்ள ஐந்து எழுத்து பெயர் கொண்ட பெண் சார்பதிவாளர்தானாம். இவர், சில புரோக்கர்களை கைக்குள் போட்டுக்கொண்டு, நத்தம் தொடர்பான நிலங்களை, நத்தம்-2 என பெயர் மாற்றி, அந்த இடங்களை பதிவு செய்து வருகிறார். இதற்காக, ஒரு பதிவுக்கு ரூ.25 ஆயிரம் கமிஷன் வாங்கிக்கொள்கிறாராம். தான் மட்டும் காசு குவித்தால் மாட்டிக்கொள்வோம்… என்பதில் உஷாராக இருக்கும் இவர், தனக்கு கீழ்நிலையில் உள்ள அத்தனை பேருக்கும் கமிஷன் தொகையை பிரித்து கொடுத்து விடுகிறாராம். அரசு எதை செய்யக்கூடாது என்கிறதோ, அதை துணிச்சலாக செய்து, கரன்சியை குவித்து வருகிறார் இந்த பெண் சார்பதிவாளர். இவருக்கு இருக்கும் அசாத்திய திறமை, வேறு எந்த சார்பதிவாளருக்கும் இல்லையே… என மாவட்டம் முழுவதும் பரவலாக பேச்சு எழுந்துள்ளதாம். அவர் தந்த பணத்தை வாங்க மறுத்தவர்கள் இரவில் நிம்மதியாக தூங்குறாங்க என்பது இப்போதைக்கு கோவை நிலைமை…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மூன்று எழுத்து தலைவர் நின்றால் பார்லிமெண்ட் தேர்தலில் வேலை செய்ய மாட்டோம் என்று சொல்வது யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெயிலூர் தொகுதியில் தொடர்ந்து நின்று தோல்வியை தழுவிய சாதி கட்சி தலைவரும், கல்வி நிறுவனங்கள் நடத்தி வரும் மூன்றெழுத்து இனிஷியல் கொண்ட தலைவர் இந்த முறையும் தாமரை, இலை கட்சி கூட்டணியில் போட்டியிட போகிறாராம். இவர் எப்போதுமே நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் மட்டும் தொகுதி பக்கம் வந்து எட்டி பார்த்து விட்டு செல்வாராம். சமீபத்தில் தாமரை கட்சி ஒன்றிய அமைச்சர் கலந்துகொண்ட கூட்டத்தில், கூட இருந்தே தன்னை தோல்வியடைய செய்து விட்டார்கள் துரோகிகள்னு, இலை கட்சி மாஜி மந்திரியான வீரமானவரை மனசில் வைத்து கொதித்துவிட்டாராம் மூன்றெழுத்து இனிஷியல் தலைவர். அப்போதில் இருந்தே மிஸ்டர் பத்து, வெயிலூர் மாவட்ட இலை கட்சியினர் கொதித்து போய் உள்ளார்களாம். எலக்ஷன் நேரத்துல மட்டும் வந்து எட்டிப்பார்ப்பதும், அதன் பிறகு தொகுதி பக்கமே வராமலும், அரசியல் செய்யாமலும், பணத்தை இறைச்சா ஜெயிச்சிடலாம்னு நெனைக்கிற ஒருத்தர் எங்களை பார்த்து இப்படி பேசுவது தேவையற்றது. இத்தனைக்கும் அவர் எங்க கட்சி நிறுவனரால் வளர்க்கப்பட்டவர். அவர் எங்கள் கட்சியை, கட்சியினரை கேவலப்படுத்துவதை ஏற்க முடியாது. அதனால அவர் வெயிலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பாளரா அறிவிச்சா, நாங்க வேலை செய்ய மாட்டோம்னு தலைமையிடம் சொல்லியதுடன், லோக்கல் தாமரை கட்சி நிர்வாகிகளிடமும் சொல்லி வருகிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.