கோவை: ‘மருந்தாளுனர்களுக்கு கொரோனா மெரிட் மார்க் வழங்கப்படமாட்டாது. இது குறித்து விரைவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது’ என அமைச்சர் கூறினார். தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மெடிக்கல் சர்வீஸ் போர்டு அமைப்பின் மூலம் 1,021 மருத்துவர்களுக்கான பணி நியமனங்கள் விரைவில் நடைபெற உள்ளது. ஏற்கனவே சான்றிதழ்கள் சரி பார்க்கும் பணி முடிவு பெற்றது.
அதற்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்திய மருத்துவ துறையின் வரலாற்றிலேயே முதல்முறையாக புதிய மாணவர்களுக்கு கவுன்சிலிங் என்பது இதுதான் முதல் முறை. தேர்வாகியுள்ள 1,021 பேருக்கும் 20 மாவட்டங்களில் காலியாக உள்ள 1,127 இடங்களில் 1021 இடங்கள் ஒதுக்கப்பட உள்ளது. சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள உள்அரங்கில் அவர்களுக்கான நேரடி பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். கொரோனா மெரிட் மார்க் வேண்டும் என்று மருந்தாளுநர்கள் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது.
கொரோனா காலத்தில் வெளியில் வந்து பணியாற்றியதால் செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள்ளுக்கு மெரிட் மார்க் கொடுத்தோம். ஆனால் மருந்தாளுனர்கள் வெளியில் வந்து பணியாற்றாததால் கொரோனா மெரிட் மார்க் கொடுக்கப்படக்கூடாது. அதற்காக தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் விரைவில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2,300 செவிலியர்கள் எம்ஆர்பி மூலம் தேர்வு செய்யப்பட்டனர். காலிப்பணியிடங்கள் உருவாகும்போது நிரப்பப்படும். இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார்.