சென்னை: பெரிய அச்சத்தை தரும் வகையில் கொரோனா பாதிப்பு இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பருவமழையை ஒட்டி சென்னையில் 10வது வார சிறப்பு மருத்துவ முகாம் தரமணியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. தெற்காசிய நாடுகளில் ஜே.என்.1 கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. ஜே.என்.1 வகை கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. புதிய வகை கொரோனா தொற்றுக்கு பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.
புதிய கொரோனா உருமாற்றமானது அதிக அளவிலான கூட்டு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இணைநோய் உள்ளவர்கள் , குழந்தைகள், முதியவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும். 1.25 லட்சம் படுக்கை வசதி தயார் நிலையில் உள்ளது. 2,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனும் தயார் நிலையில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.