டெல்லி: கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட லட்ச கணக்கான மக்களின் தனிப்பட்ட தகவல்கள் இணைய தளத்தில் கசிந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசி செலுத்திய பலரது பெயர், பிறந்த தேதி, பாலினம், செல்போன் எண், எந்த வகை தடுப்பூசி செலுத்தினர் உள்ளிட்ட விவரங்கள் கோவிட் தளத்தில் இடம் பெற்றுள்ளது. தனி நபரின் பாதுகாப்பு தொடர்புடைய இந்த தகவல்கள் தற்போது டெலிகிராமில் வெளியாகி இருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
குறிப்பாக டெலிகிராம் எனப்படும் தானியங்கி பக்கத்தில் குறிப்பிட்ட நபர்களின் செல்போன் எண்ணை தட்டச்சு செய்தலே அவர்களது ஆதார் எண், பாஸ்போர்ட் எண் போன்ற தனிப்பட்ட தகவல்கள் கிடைப்பதும் தெரியவந்துள்ளது. இதனை அம்பலப்படுத்திய மலையாள செய்தி இணையத்தளம் தெலுங்கானா தகவல் தொடர்பு துறை அமைச்சர் கே.டி.ராமராவ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, கார்த்தி சிதம்பரம், முன்னாள் ஒன்றிய அமைச்சர் அஷ்வர்தன் உள்ளிட்ட பலரது விவரங்களை பெற்று வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனிப்பட்ட தரவுகள் கசிந்து இருப்பது பற்றி ஒன்றிய அரசு உடனடியாக விளக்கமளிக்க வேண்டும் என தேசிய வாத காங்கிரஸ் கட்சி தலைவர் எம்.பி.சுப்ரியா சூலே வலியுறுத்தியுள்ளார். அதே நேரத்தில் தனது தகவல் கசிந்து இருப்பதை ஸ்கிரீன் ஷாட் மூலம் உறுதி செய்த கார்த்தி சிதம்பரம் டிஜிட்டல் இந்தியா மீதான தாக்கத்தில் ஒன்றிய அரசு தனி மனிதனின் அந்தரங்க உரிமையை பாதுகாக்க தவறி விட்டதாக கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கோவிட் தளம் பாதுகாப்பானது என்றும் தகவல் கசிவு குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் ஒன்றிய அரசு விளக்கமளித்துள்ளது.