Friday, May 10, 2024
Home » கூட்டுறவு துறையில் கருணை அடிப்படையில் 26 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்

கூட்டுறவு துறையில் கருணை அடிப்படையில் 26 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்

by Karthik Yash

சென்னை: கூட்டுறவு துறையின் சார்பில் 26 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார். கூட்டுறவு துறையில் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்து இயற்கை எய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு தகுதி பெற்ற 26 பேருக்கு தமிழ்நாடு அமைச்சுப் பணிகளின் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளை கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று வழங்கி பேசியதாவது: கூட்டுறவு துறையில் கடந்த காலங்களில் பணிக்காலங்களில் இயற்கை எய்தியவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவு அளிக்கிற வகையில் அவர்களது வாரிசுதாரர்களுக்கு கல்வித்தகுதிக்கு ஏற்றவாறு பணி வழங்குவது என முடிவெடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் கரங்களால் பணிநியமன ஆணை வழங்கப்பட இருந்தது. ஆனால், வெளிநாட்டு பயணம், நிதி நிலைக் கூட்டம், சட்டமன்ற தொடர் கூட்டம் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வரலாம் என்ற சூழ்நிலையில்தான் முதல்வர், அந்தந்த துறைகளில் இருக்கக்கூடிய பணிகளை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், இந்த 26 குடும்பங்களின் வாரிசுதாரர்களுக்கு அவர்களுடைய கல்வித்தகுதிக்கு ஏற்றவாறு பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் கே.கோபால், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

* விலை உயர்வால் ரேஷனில் அரிசி தட்டுப்பாடு இல்லை
அமைச்சர் பெரியகருப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:அரிசி விலை உயர்வால் ரேஷன் கடைகளில் அரிசி தட்டுப்பாடு இல்லை. போதிய அளவு அரிசி கையிருப்பு உள்ளது. தலைநகரம் தொடங்கி கிராமம் வரை கூட்டுறவு சங்கத்தின் வங்கிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கூட்டுறவு துறையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கூட்டுறவு துறையின் சார்பில் விவசாயிகளுக்கு வட்டி இல்லா விவசாய கடன் வழங்கப்படுகிறது. தேர்தல் அறிக்கையில் கூறியபடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் 13,500 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டு 16 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரண்டரை ஆண்டு காலத்தில் 9 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. அரிசி விலை உயர்வால் ரேஷன் கடைகளில் எந்த தட்டுப்பாடும் இல்லை. போதிய அளவில் அரிசி இருப்பு உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

7 + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi