ஜோத்பூர்: என்னிடம் பொய் சொன்னால், சம்பந்தப்பட்ட அரசு ஊழியரின் முகத்தை கறுக்கி விடுவேன் என்று பாஜக எம்எல்ஏ பேசிய பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் ஷெர்கர் தொகுதி எம்எல்ஏ பாபு சிங் ரத்தோட் என்பவரின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் பேசும் எம்எல்ஏ, ‘அரசு ஊழியர்கள் என்னிடம் பொய்யை சொல்லி என்னை தவறாக வழிநடத்த முயன்றால், அவர்களின் முகத்தை கறுக்கி விடுவேன். உங்களது எஜமானர் பொதுமக்கள் தான்.
அவர்களுக்கான சேவையை ஒழுங்காக வழங்கவில்லை என்றால், உங்களை அவர்கள் தண்டிப்பார்கள்’ என்று கூறியுள்ளார். அரசு ஊழியர்களை மிரட்டும் வகையில் எம்எல்ஏவின் வீடியோ வைரலானதை அடுத்து, அவர் அந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார். இவ்விவகாரம் குறித்து எம்எல்ஏ பாபு சிங்கைத் தொடர்பு கொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அவர் எவ்வித பதிலும் அளிக்கவில்லை.