ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகேயுள்ள பாபுசா லைன் பகுதியில் மேத்யூஸ் என்பவரின் வீட்டின் அருகே தடுப்புச்சுவர் கட்டுவதற்காக கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ரிஷ்வான் (20), ஜாகீர் (26), இம்தியாஸ் மற்றும் அமீர் உள்ளிட்ட 4 பேர் நேற்று இந்த பணியை செய்து கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாரதவிதமாக மண் சரிந்து விழுந்தது. இதில் ரிஷ்வான் மற்றும் ஜாகீர் ஆகியோர் மண்ணில் புதைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் மண்ணை அகற்றி தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் இருவரும் மீட்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனளிக்காமல் ரிஷ்வான் பரிதாபமாக உயிரிழந்தார். ஜாகீர் நல்ல நிலையில் உள்ளார். இதையடுத்து ஊட்டி போலீசார் நிலத்தின் உரிமையாளர் மேத்யூஸ் (45), சூபர்வைசர் நசுருல்லா (29) ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்தனர். கடந்த மாதம் ஊட்டி மேல்காந்தி நகரில் கட்டுமான பணியின்போது, மண் சரிந்து விழுந்ததில் 6 பெண் தொழிலாளிகள் உயிரிழந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
* ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கட்டுமான பணியின்போது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து இருவர் சிக்கிய விபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரிஸ்வான் (வயது 22) என்பவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். இந்த விபத்தில் காயமடைந்து உதகை தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சகிருக்கு (வயது 25) சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.