கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அண்ணாமலையுடன் வந்த பாஜவினர் மற்றும் அடியாட்கள், திடீரென திமுகவினர் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. ஒரு வேட்பாளரே அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் செயல்படுகிறார். கேள்வி கேட்போரை, அடியாட்களை வைத்து அடிக்கிறார். இதை, இந்திய தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கலாமா? இந்த விதிமீறல் பற்றி மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகர காவல்துறை துணை ஆணையாளரிடம் புகார் மனு அளித்துள்ளோம்.
இந்திய தேர்தல் ஆணையம் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நடுநிலையோடு செயல்பட வேண்டும். கோவை மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். ஆனால், இங்கு, தோல்வி பயத்தால், மதவெறியை தூண்டி, கலவரத்தில் ஈடுபட பாஜவினர் துடிக்கின்றனர். எந்த நேரத்திலும் கலவரத்தை உண்டாக்குவார்கள் என்ற அச்சம் மக்களிடையே உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.