நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே அழகம்பட்டி பகுதி தண்டவாளத்தில் நேற்று முன்தினம் இரவு நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் நோக்கி அந்தியோதயா விரைவு ரயில் சென்றது. அப்போது மர்ம நபர்கள் சிலர் தண்டவாளத்தில் இருந்த ஜல்லி கற்களை குவித்தும், சுமார் 2 மீட்டர் அகலம் கொண்ட சுண்ணாம்பு கல்லை மறைத்தும் வைத்திருந்தனர்.
இதனால் ரயில் இன்ஜினில் பயங்கர சத்தத்துடன் சுண்ணாம்பு கல் மோதி நொறுங்கியது. இதையடுத்து உடனே ரயிலை நிறுத்திய பைலட், தண்டவாளத்தில் இருந்த கற்களை அகற்றினார். பின்னர் 15 நிமிடங்கள் தாமதத்திற்கு பின் மீண்டும் ரயில் புறப்பட்டு சென்றது. இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ரயிலை கவிழ்க்க சதி நடந்ததா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரிக்கின்றனர்.