Friday, May 31, 2024
Home » மீனவர்கள் மீதான தொடர் தாக்குதலை கண்டித்து இன்றும், நாளையும் காங்கிரசார் போராட்டம்: துரை சந்திரசேகர் எம்எல்ஏ பேச்சு

மீனவர்கள் மீதான தொடர் தாக்குதலை கண்டித்து இன்றும், நாளையும் காங்கிரசார் போராட்டம்: துரை சந்திரசேகர் எம்எல்ஏ பேச்சு

by Ranjith

பொன்னேரி: கடல் தாமரை என்ற அமைப்பை உருவாக்கி மீனவர்களை பாதுகாப்பதாக வாக்குறுதி அளித்த பாஜ அதனை நிறைவேற்றவில்லை. ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல்களை தடுக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்து இன்றும், நாளையும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக எம்எல்ஏ துரை சந்திரசேகர் பேசியுள்ளார். பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

இலங்கை அரசால் தமிழக மீனவர்களின் படகுகளும், வலைகளும் சேதப்படுத்தப்படுவதும், மீனவர்களை சித்திரவதைப்படுத்தி சிறையில் அடைப்பது கடந்த 10 ஆண்டுகளாக தொடர் கதையாகி வருகிறது. இதில் ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது. கடந்த 10 ஆண்டுகளில் கடல் தாமரை என்ற அமைப்பை உருவாக்கி மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிப்போம் என வாக்குறுதி அளித்து ஆட்சியை பிடித்த நிலையில், தற்போது வரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வரும் 27, 28 தேதிகளில் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்த உள்ளது. மீனவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி, 27ம் தேதி கடலில் இறங்கி போராட்டம் நடத்த உள்ளதாகவும், 28ம் தேதி பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு கொடி போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார். தேர்தலுக்காக நடத்தப்படும் போராட்டம் கிடையாது. தற்போது மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்தும் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

தேர்தல் கூட்டணி தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், கடந்த முறை போட்டியிட்ட 9 தொகுதிகளை விட கூடுதல் தொகுதிகளை பெற தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார். அனைத்து அரசியல் கட்சியினரும் 40 தொகுதிகளையும் வெல்வோம் என கூறி வருவது இயல்புதான், பாஜவை தமிழ்நாடு மக்கள் எப்போதும் ஏற்க மாட்டார்கள், பாஜ தமிழ்நாட்டில் நிராகரிக்கப்படும். தற்போது உள்ள 4 எம்எல்ஏக்கள் கூட அதிமுக கூட்டணியால் கிடைத்தது என கூறினார்.

You may also like

Leave a Comment

twelve + 20 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi