நந்தர்பர்: என்சிபியும், சிவசேனாவும் காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்து இறப்பதை காட்டிலும் அஜித்பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டேவோடு சேரலாம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், நந்தூர்பர் மாவட்டத்தில் நடந்த பிரசார பேரணியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘‘சுமார் 40-50ஆண்டுகள் அரசியலில் இருக்கும் மிகப்பெரிய தலைவர் பாரமதி மக்களவை தேர்தலுக்கு பின் கவலை அடைந்துள்ளார். ஜூன் 4ம் தேதிக்கு பின் சிறிய கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் இணையக்கூடும் என்று அவர் கூறுகிறார். நகல் என்சிபி மற்றும் சிவசேனா காங்கிரஸ் கட்சியுடன் இணையும் மனநிலையில் இருக்கின்றன. ஆனால் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து இறப்பதை காட்டிலும் அஜித்பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டேவிடம் வாருங்கள்” என்றார்.
என்னை உயிருடன் புதைக்க பார்க்கிறார்கள்
எதிர்க்கட்சியில் உள்ள சிலர் என்னை உயிருடன் புதைக்க விரும்புகிறார்கள். ஆனால் நாட்டு மக்கள் எனது பாதுகாப்புக் கவசம் போல் விளங்குகிறார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். அவர் கூறுகையில்,’ எதிர்க்கட்சிகள் மக்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் இழந்துவிட்டனர். அதனால்தான் அவர்களின் அரசியல் இடம் சுருங்கி வருகிறது. இந்திய மக்கள் எனது பாதுகாப்பு. முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பைப் போலவே என்னை உயிருடன் புதைக்க வேண்டும் என்று பேசுகிறார்கள். மோடி, உனது கல்லறை தோண்டப்படும் என்று காங்கிரஸ் கூறுகிறது. என்னைத் தவறாகப் பயன்படுத்தும்போது, சிவசேனா தொண்டர்கள் வருத்தம் அடைகிறார்கள்’ என்றார்.