ஜெய்ப்பூர்: சச்சின் பைலட்டின் ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏ மீது ராஜஸ்தான் போலீசார் மோசடி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக பாதயாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் இளம் தலைவர் சச்சின் பைலட்டின் ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏ வேத் பிரகாஷ் சோலங்கி மீது, பஜாஜ் நகரை சேர்ந்த கவுசல்யா தேவி என்பவர் நிலஅபகரிப்பு புகார் தெரிவித்துள்ளார்.
அதையடுத்து எம்எல்ஏ வேத் பிரகாஷ் சோலங்கி மீது பஜாஜ் நகர் காவல் நிலைய போலீசார் மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து எம்எல்ஏ சோலங்கி கூறுகையில், ‘நிலத்திற்கான காசோலையை அந்தப் பெண்ணுக்கு வழங்கிவிட்டேன். ஒன்றரை மாதம் கழித்து என்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனது இமேஜை கெடுக்கும் வகையில், என்னை நிலஅபகரிப்பு மாபியாவாக காட்டுகின்றனர். இதன் பின்னணியில் சதி உள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்’ என்றார்.
இதுகுறித்து பஜாஜ் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திர குமார் கூறுகையில், ‘காதிபுராவைச் சேர்ந்த கவுசல்யா தேவி அளித்த புகாரின் அடிப்படையில், எம்எல்ஏ சோலங்கி மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 420, 406, 120 (பி) ஆகியவற்றின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு மாநில குற்றப்பிரிவு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என்றார்.