சென்னை:பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயக்குமார் தனசிங், உவரியை அடுத்த கரைசுத்துபுதூர் என்ற இடத்தில் உள்ள அவரது தோட்டத்தில் கொடூரமான முறையில் எரித்துக் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. ஓர் அரசியல் கட்சியின் மாவட்டத் தலைவராக இருப்பவர், காவல்துறையில் புகார் அளித்தும் கூட அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
அவரது உடல் இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்டுள்ளது. ஏப்ரல் 30ம் தேதி ஜெயக்குமாரே தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அளித்துள்ளார். அதன்அடிப்படையில் காவல்துறை செயல்பட்டிருந்தால் ஜெயக்குமாரை காப்பாற்றியிருக்கலாம். எனவே அவரது படுகொலைக்கு காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும். இந்த வழக்கில் உண்மையை வெளிக்கொண்டு வர சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.