பெங்களூரு: தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி சிக்கமங்களூரு தொகுதியில் தோல்வியடைந்தார். தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளரான சிடி ரவி கர்நாடகா மாநிலம் சிக்மகளூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார். இவர் ஏற்கனவே சிக்கமகளூர் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் பாஜகவின் சிடி ரவி சிக்மகளூரில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்தார். 2018ஆம் ஆண்டு சிக்மகளூர் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் சி.டி.ரவி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் சங்கர் பி.எல்-ஐ தோற்கடித்து வெற்றி பெற்றார்.
சி.டி.ரவி சிக்மகளூர் தொகுதியில் இருந்து நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 5வது முறையாக வெற்றி பெற தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் சிக்மகளூர் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது.
சிக்மகளூர் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் திம்மாஷெட்டி மற்றும் காங்கிரஸ் சார்பில் எச்.டி.தம்மையா ஆகியோர் களமிறங்கினர். இந்நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் சிக்மகளூர் தொகுதியில் ஆரம்பம் முதலே பின்னடைவைச் சந்தித்து வந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் சி.டி.ரவியை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தம்மையா 8,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.