புதுடெல்லி: ‘நாடே ஆட்சி மாற்றத்தை விரும்புகிறது. 2004ல் ‘இந்தியா ஒளிர்கிறது’ என்கிற பாஜவின் கோஷத்திற்கு ஏற்பட்ட கதிதான் ‘மோடியின் கியாரண்டி’க்கும் ஏற்படும்’ என காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கே பேசினார். மக்களவை தேர்தலுக்கான காங்கிரசின் தேர்தல் அறிக்கையை இறுதி செய்வதற்காக, அக்கட்சியின் உயர்மட்ட காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நேற்று கூடியது. இதில், கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மூத்த தலைவர்கள் அம்பிகா சோனி, பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம், திக்விஜய் சிங், அஜய் மக்கென், குமாரி சைலஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவரான ப.சிதம்பரம் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை வாசித்தார். சமூக நீதி, இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு நீதி உத்தரவாதம் ஆகிய 5 தலைப்புகளில் தலா 5 வாக்குறுதி என 25 உத்தரவாதங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரத்தை கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வழங்க காரிய கமிட்டியில் முடிவு செய்யப்பட்டது. இதனால் விரைவில் தேர்தல் அறிக்கையை மல்லிகார்ஜூன கார்கே வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கூட்டத்தில் பேசிய கார்கே, ‘‘மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என நாடு தீவிரமாக விரும்புகிறது. கடந்த 2004ல் வாஜ்பாய் முன்வைத்த ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற கோஷத்துக்கு என்ன கதி ஏற்பட்டதோ, அதே கதி தற்போதைய ஆட்சியாளர்களால் முன்வைக்கப்படும் ‘மோடியின் உத்தரவாதங்கள்’ முழக்கத்துக்கும் ஏற்படும். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு விஷயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இந்த விஷயங்களை கிராமம் முதல் நகரம் வரை உள்ள அனைத்து வீடுகளுக்கும் காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் கொண்டு செல்ல வேண்டும். தேர்தல் அறிக்கைக்கு உரிய முக்கியத்துவம் கிடைப்பதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும்.
தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு உறுதிமொழியும் மிக நீண்ட ஆய்வுக்குப் பிறகே அறிவிக்கப்பட்டுள்ளன. 1926ல் இருந்து காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைகள் அனைத்தும் நம்பிக்கை மற்றும் உறுதிக்கான ஆவணங்களாக இருந்திருக்கின்றன. ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை நாடு தழுவிய அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. மக்கள் சந்திக்கும் உண்மையான பிரச்னைகளை எழுப்பி இருக்கிறது. இது வெறும் அரசியல் யாத்திரை அல்ல. மிகப் பெரிய மக்கள் இயக்கமாக நமது அரசியல் வரலாற்றில் இது பொறிக்கப்படும். இதுபோன்ற மிகப் பெரிய மக்கள் இயக்கத்தை நமது காலத்தில் வேறு யாரும் மேற்கொண்டதில்லை. இதனை யாராலும் மறுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.