சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் மற்றும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை விதிகள் வகுக்கப்பட்டு இரண்டு ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வந்த கட்டண விகிதம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, 2020-2021ம் ஆண்டில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளுக்கு ரூ.12,458 என நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ரூ.6,000ஆக குறைக்கப்பட்டுவிட்டது. இதேபோன்று ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான கட்டணங்களும் 2021-2022ம் ஆண்டு குறைக்கப்பட்டன. விலைவாசிக்கு ஏற்ப, ஆண்டுக்காண்டு உதவித் தொகையை உயர்த்துவதுதான் சரியான அளவுகோலாக இருக்குமே தவிர, குறைப்பது அல்ல. அதனால் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் வழங்கப்படும் உதவித்தொகையை குறைத்து வெளியிட்ட ஆணையை அரசு திரும்ப பெறப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.