ஆலந்தூர்: பேருந்தில் சென்றபோது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தன்னார்வ நிறுவன ஊழியரை, போக்சோ சட்டத்தில் பரங்கிமலை மகளிர் போலீசார் கைது செய்தனர். பரங்கிமலை, பட்ரோடு ஐரோப்பியன் லேனைச் சேர்ந்தவர் எலியேசர் (42). இவர் தன்னார்வ நிறுவன ஊழியர் ஆவார். இந்தநிலையில் மவுண்ட் பூந்தமல்லி சாலை வழியாகச் சென்ற பேருந்தில் எலியேசர் நேற்று பயணம் செய்தார். அப்போது ஒரு மாணவிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனைப் பார்த்த சக மாணவர்கள், பேருந்தில் இருந்து கீழே இறக்கி எலியேசருக்கு தர்ம அடி கொடுத்தனர். பின்னர் பரங்கிமலை துணை கமிஷனர் அலுவலகத்தில் அவரை ஒப்படைத்துள்ளனர். அங்கிருந்த போலீசார் எலியேசர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறி, பரங்கிமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர். மகளிர் போலீசார் எலியேசரை போக்சோ சட்டத்தில் கைது செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.