சென்னை: சென்னை அடையாறு மண்டலம், வார்டு எண் 169, சின்னமலை, வெங்கடாபுரம் பகுதியில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடம் கட்டிடத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அடிக்கல் நாட்டினார்.
மேலும் ஜோதியம்மாள் நகர் பகுதியில் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு கட்டிடம் மற்றும் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம், சென்னை ஆர்.வி.நகர் பகுதியில் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் உள் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மேயர் பிரியா, தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர் மகேஷ்குமார், மண்டலக்குழு தலைவர்கள் துரைராஜ், கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.