சென்னை: மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். 2006, 2011, 2016 தமிழக சட்டமன்ற தேர்தல்களிலும் தமிழிசை போட்டியிட்டுள்ளார். 2009 மக்களவை தேர்தலில் வடசென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். தமிழக பாஜக தலைவராக 2014 முதல் 2019ம் ஆண்டு வரை பதவி வகித்தார். 2019 தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தமிழிசை தோல்வி அடைந்தார். 2019ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி தெலங்கானா ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்றார்.
2021 பிப். 16ம் தேதி புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பும் தமிழிசைக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா ஆளுநர் பதவிகளை தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்தார். இது குறித்து பேசிய தமிழிசை; ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது உண்மைதான்; மீண்டும் அரசியலுக்கு வருகிறேன். மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட உள்ளேன். புதுச்சேரியில் போட்டியிட மாட்டேன். எந்த தொகுதி என்று பா.ஜ.க. மேலிடம் அறிவிக்கும் என சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு தமிழிசை அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.