நேர்மறை ஆற்றலை தக்க வைத்துக் கொள்வதும், எதிர்மறை ஆற்றலை குறைத்துக் கொள்வதும்தான் வண்ணத்தின் முதற்படி சூட்மம். அதன் அடிப்படையில், வண்ணத்தை கையாள்வது மாற்றுச் சிந்தனையும், வெற்றி சிந்தனையும் ஆகும். இங்கு, வெற்றி என்பது ஒரு எதிர்மறை ஆற்றலை எப்படி நேர்மறை ஆற்றலாக மாற்றிக் கொள்வது ஆகும்.
சிம்மம்: ராசிகளின் தலையான ராசியாக சிம்மம் சொல்லப்பட்டாலும், ராசியின் வரிசையில் ஐந்தாவதாக வருகிறது. இந்த ராசியின் அதிபதி சூரியன். மேஷத்தில் உச்சம் பெறும் அமைப்பை பெறுவதால், மேஷராசியான காலபுருஷனுக்கு முதலாம் இடம் தக்க வைக்கப் படுகிறது. இந்த ராசியின் வண்ணம் ஆரஞ்சு ஆகும். அரசு சார்ந்த தொடர்புகள், அரசாங்க விஷயங்கள், அரசியல், நிர்வாகம், தந்தை பற்றிய சிந்தனை மற்றும் ஆத்மார்த்தமான உணர்வுகளும், தேவைகளையும் பூர்த்தி செய்யும் அமைப்பாக சிம்மம் வருகிறது. சிம்மத்தில் அமர்ந்துள்ள கிரகத்தின் நிறங்கள் பற்றிக் கொள்வதால், உங்கள் ஆத்மார்த்தமான விஷயங்கள் ஈடேறும்.
உதாரணத்திற்கு, சிம்மத்தில் சுக்ரன் இருந்தால், நீங்கள் பிங்க் நிற வண்ணத்தை அதிகமாக உபயோகிக்கலாம். மேலும், வாசனை திரவியங்கள், மேக்கப் சாதனங்கள் தொடர்பான விஷயத்திலும் நீங்கள் பிங்க் நிற வண்ணத்தை பயன்படுத்துவதால் ஆத்மார்த்தமாக நீங்கள் விரும்பும் வண்ணம் ஈடேறும். சிம்மத்திற்கு நான்காம் அதிபதியாக விருச்சிக ராசியாக (4ம்) ஒன்பதாம் அதிபதியாக (9ம்) மேஷம் ராசியாக செவ்வாய் இருப்பதால், செவ்வாய் நிறம் சிவப்பாக இருப்பதால், வாகனங்களில் சிவப்பு நிறத்தை பயன்படுத்துங்கள். வீட்டின் பூஜையறையில் சிவப்பு நிறத்தையும், முருகனையும் வழிபடுங்கள். உங்களின் விருப்பங்களும் தேவைகளும் இறையாற்றளுடன் நிறைவேறும். மனதிற்கு ஆத்ம திருப்தியை தரும்.
சிம்மத்திற்கு பதினொராம் அதிபதியாகவும், இரண்டாம் அதிபதியாகவும், மிதுனராசியும், கன்னிராசியும் வருவதால், அதன் அதிபதி புதனாக இருப்பதால், உங்களின் பொருளாதார முன்னேற்ற விஷயங்களை கையாளும் போது, பச்சை நிற வண்ணத்தை பயன்படுத்துங்கள். உங்களின் பொருளாதார முன்னேற்றம் சீர்பெரும் மேல் நோக்கியே உங்களின் பொருளாதாரம் இருக்கும், என்பது நிதர்சனமான உண்மை. இதற்காக, நீங்கள் வழிபடும் தேவதையாக திருச்செந்தூர் அருகே உள்ள நவதிருப்பதிகளில் இரட்டை திருப்பதிக்கு புதன்கிழமை தரிசனம் செய்யுங்கள். உங்கள் வாழ்வின் பெரிய மாற்றங்கள் வந்து சேரும். அவ்வாறு நீங்கள் செல்லும்போது, நீங்களே உங்கள் வீட்டில் துளசி மாலையை கட்டி எடுத்துச் சென்று வழிபாடு செய்யுங்கள் இன்னும் சிறப்பாக இருக்கும்.
உங்களின் ராசிக்கு சப்தம ஸ்தானம் என்னும் இடத்தில் (7ம்) சனி பகவான் மிகவும் வலிமையாக இருப்பதால், சனிக்கிழமை தோறும் நீல நிறத்திற்குரிய வஸ்துக்களை தானம் செய்யுங்கள். உதாரணத்திற்கு, போர்வை, கைகுட்டை, எழுதுகோல் அதில் முக்கியமாக மை ஊற்றி பயன்படுத்தும் எழுதுகோல் ஆகியவற்றை தானம் செய்யுங்கள். சனிக்கிழமை சைவத்தை மட்டும் உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் ராசிக்கு ஆறாம் (6ம்) ஏழாம்(7ம்) அதிபதியாக வருவதால், நண்பர்கள், வேலை செய்யும் இடத்தில் உள்ள சக தொழிலாளர்கள், புதிதாக யாரையும் சந்திக்கும் நபர்கள் ஆகியோருக்கு நீல நிற பொருட்களை தானம் செய்யுங்கள்.
உங்களிடம் வரும் தடைகள் விலகி ஓடும். சிலருக்கு நீல நிற வண்ணத்திற்குரிய கற்கள் பதிக்கப்பட்ட அணிகலன்களையும் தானம் செய்யலாம். இவ்வாறு தானம் செய்வது அவரவர் பொருளாதாரத்தின் அடிப்படையில் செய்வது நன்று. உங்களின் ராசிக்கு மூன்றாம் அதிபதியாகவும் (3ம்), பத்தாம் அதிபதியாகவும், துலாம் ராசியும், ரிஷப ராசியும் வருவதால், பிங்க் நிற வண்ணம் உங்களுக்கு புது முயற்சிகளுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியதாக இருக்கும். தொழிலில், புதுபுது ஐடியாக்கள் உருவாகும். அது புதிய உத்வேகத்தை உங்களுக்கு கொடுத்துக் கொண்டே இருக்கும்.
மஞ்சள் நிற வண்ணத்தை பெரும்பாலும், தவிர்க்க முயற்சியுங்கள். உங்கள் இடர்பாடுகளுக்குள் சிக்க வைக்காமல் இருக்கும். இவ்வுலகில் ஒளி இல்லையென்றால் உலகம் என்பது இல்லை. அதுபோலவே, ஒளியின் உட்பொருளான நிறம் இல்லையென்றால் வேறுபாடு இல்லை. அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கலந்து உள்ளது. நிறத்தை திறம்பட பயன்படுத்துங்கள். எதிர்மறை ஆற்றலை நேர்மறை ஆற்றலாக மாற்றுங்கள்.
தொகுப்பு: சிவகணேசன்