பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (24). இவர் அதே பகுதியில் உள்ள டாக்டர்அம்பேத்கர் கலைக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டி வருவதுடன் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் கிளை செயலாளராகவும் உள்ளார்.
நேற்றுமுன்தினம் இரவு பெரம்பூர் அகரம் பகுதியில் மற்றொரு ஆட்டோ டிரைவரிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது செம்பியம் காவல் நிலைய ஏட்டு அண்ணாமலை என்பவர் வந்து அருண்குமாரை சரமாரியாக தாக்கியதுடன் கை விலங்கிட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரனிடம் அருண்குமார் கொடுத்த புகாரில், ‘’அத்துமீறலில் ஈடுபட்ட தலைமை காவலர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார்.
இதன்படி, தலைமை காவலர் குறித்து விசாரணை நடத்தி நேற்று பணியிடை நீக்கம் செய்தனர். இந்தநிலையில் தலைமை காவலர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் வடசென்னை மாவட்டம் சார்பில், பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோடு காந்தி சிலை அருகே இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் வடசென்னை மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். வடசென்னை மாவட்ட செயலாளர் வசந்தபாரதி, தென் சென்னை மாவட்ட செயலாளர் மணி, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநில தலைவர் வெங்கடேஷ், வேம்புலி உள்பட பலர் கண்டன உரையாற்றினர். தலைமை காவலர் அண்ணாமலை மீது வழக்குபதிவு செய்து உரிய முறையில் விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட மாணவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.