அண்ணாநகர்: சென்னை வடபழனியை சேர்ந்த ராஜசேகரன் மகன் ஸ்ரீராம் சீனிவாசன் (29), மாற்றுத்திறனாளி. பிறவியிலேயே காது கேட்காமல், வாய் பேச முடியாமல், நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இவர், இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான 30 கிமீ தூரம் நீந்தும் முயற்சிக்கு அனுமதி கோரி, நேற்று பெற்றோருடன் ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸை சந்தித்து மனு அளித்தார். அதற்கு அனுமதி கிடைத்ததால் ஸ்ரீராம் சீனிவாசன், நாளை இரவு தலைமன்னாரிலிருந்து புறப்பட்டு சுமார் 24 மணி நேரம் நீந்தி தனுஷ்கோடி வர உள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீராம் சீனிவாசன் தாய் வனிதா கூறும்போது,‘‘ எனது மகனுக்கு சாதாரண மனிதர்களை போன்று கை, கால்களை நீட்டி நீந்த முடியாது. நெஞ்சு பலத்தில் கையை துடுப்பு மாதிரி பயன்படுத்தி தான் நீந்த முடியும். இந்த முறையில் ஏற்கனவே 2 முறை கடலூர் முதல் புதுச்சேரி வரை நீந்தி சாதனை புரிந்தார். இவர் உலக சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான 30 கிமீ தூரம் நீந்தும் முயற்சியில் ஈடுபடுத்த போகிறோம்’’ என்றார்.